Saturday, March 17, 2012

**பெயரற்ற யாத்ரீகன் ::: ஜென் கவிதைகள்** }{ யுவன் சந்திரசேகர் }{


நாரிஹரிரா : ஜப்பான்

இறுதியில்,
இந்தச் சாலையில்தான் 
வந்து சேர்வேன் நான் என 
நன்றாகத் தெரியும். 
ஆனால்,
இன்றுதான் அந்த நாள் என்று 
எனக்குத் தெரியாது நேற்று. 

லூ ஹார்ட்மேன் : அமெரிக்கா 

என்ன வேடிக்கை !
அதோ, தியான அறையில் 
தேநீர் விநியோகிக்கும் நடிகன் 
நான்தான் 
தான் என்று 
நினைத்துக் கொள்கிறான்.

ஒரோக்கு : ஜப்பான் 

என்னுடைய பகற்பொழுதுகள்
இதைவிடவும் நீண்டிருந்தாலும் 
கூட, 
இந்த உலகை விட்டு 
நீங்கி விடாது இருள்.
மரணத்தின் பாதையில்,
மலைகளின் மத்தியில் 
நிலவை நோக்கி 
யிருப்பேன் நான்.

யோஸா பூஸன் : ஜப்பான் 

திமிங்கிலம் !
ஆழ ஆழ அது 
செல்கையில் 
உயர உயர எழுகிறது 
அதன் வால் !

இக்யு ஸோஜன் : ஜப்பான் 

ஒரு மாதம் முன்பு
நேற்றுக் கடன் வாங்கியதை 
இந்த மாதம்
இன்று திருப்பி தருகிறேன்.
கடன் வாங்கிய ஐந்தில் 
நான்கைத் தந்திவிட்டேன்.
எனவே,
பாக்கி எதுவும் இல்லை,
ஆதி சூன்யத்தைத் தவிர.

பீட்டர் லெவிட் : அமெரிக்கா 

தோட்டத்தில் களை பறிக்கும்போது 
அல்லது 
கிணற்றடியில் சீசாக்களைக் கழுவும்போது
நோயாளிக்குக் கஞ்சி காய்ச்சும்போது 
அல்லது 
பிறரின் குழந்தையைச் செவிமடுக்கும்போது 
புத்தகம் படிக்கும்போது
மரத் தடிகளை அடுக்கும்போது 
உள்ளூர்த் தினசரிக்கு எழுதும்போது 
அல்லது
அடம்பிடிக்கும் அந்த ஆட்டுக்குட்டியை 
நம் உலகுக்குள் இழுக்கும்போது
எனக்குக் கேட்கிறது 
என்னை அண்டை வீட்டானை 
ஒன்றிலிருந்து அடுத்ததுக்கு 
நகர்த்தும் பாடல் :
பூமி 
தன் காலிப் பாத்திரத்திலிருந்து 
நமக்கு உணவூட்டுகிறாள்.  

ஆழமான கருதுக்களுடைய ஜென் கவிதைகளை மொழிபெயர்த்து இருக்கிறார் யுவன் சந்திரசேகர். வாசிக்க வாசிக்க தான், அதனுடைய இன்பத்தின் சுவை தெரியும். ஒவ்வொரு கவிதையையும் படிப்பதற்கு முன்னும் பின்னும் நிறைய சிந்தனை சார்ந்த பயணம் செய்ய வேண்டியுள்ளது. 

எனக்கு புரிந்த வரைக்கும், ஜென் கவிதைகளின் சிறப்பென்றால் என்றால் கவிதையின் விளக்கத்தை நேரிடையாக சொல்லாமல், வாசிப்பவனை யோசித்து, புரிந்து கொள்ள வைப்பதே. அதே போன்றொரு  முயற்ச்சியை   நான் செய்து பார்த்திருக்கிறேன். அதனை படிக்க இங்கே க்ளிக்கவும் 

வெளியீடு - உயிர்மை பதிப்பகம் 
விலை - ரூ. 110 

No comments:

Related Posts with Thumbnails